வித் லவ்’ (With Love) பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’வித் லவ்’ (With Love) பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
முதல் காதல் பலருக்கு தோல்வியில் முடிந்தாலும், அதன் நினைவுகள் மட்டும் ஏதாவது ஒரு தருணத்தில், நம் இதயத்தை தொட்டுக்கொண்டே இருக்கும். அப்படி ஒரு தருணமாக நம் முதல் காதலை நினைவுப்படுத்துவது மட்டும் இன்றி, அந்த காதலை மீண்டும் தேடிச் செல்லும் ஒரு இனிமையான பயணத்தை மேற்கொள்ள தூண்டுவது தான் இப்படத்தின் கதைக்கரு.
திருமணத்திற்காக குடும்பத்தார் பார்த்த அனஸ்வரா ராஜனை சந்திக்கிறார் அபிஷன் ஜீவிந்த். இருவரும் தங்களைப் பற்றிய விபரங்களை பரிமாறிக்கொள்ளும் போது, தங்களது முதல் காதல் மற்றும் அதன் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அப்போது அனஸ்வரா ராஜானுக்கு தோன்றும் ஒரு யோசனை மூலம், இருவரும் இணைந்து தங்களது முதல் காதலை தேடிச் செல்கிறார்கள். அந்த தேடுதல் பயணம் இவர்களிடத்தில் காதலை உண்டாக்கியதா ? இல்லையா ? என்பதை, மனதின் ஆழத்தில் புதைந்திருக்கும் மகிழ்ச்சியான அல்லது வலிமிகுந்த முதல் காதல் தருணங்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில் சொல்வதே ‘வித் லவ்’.
பள்ளிப் பருவக் காதல் என்பது எதிர்பார்ப்புகள் இல்லாத, தூய்மையான மற்றும் முதல் வலி நிறைந்த நினைவாகும். இந்த பருவம் காதல், நட்பு மற்றும் சிறு சிறு உணர்ச்சிப் போராட்டங்களை உள்ளடக்கிய மறக்க முடியாத ஒரு காலகட்டம் என்பதை இயக்குநர் மதன் அழகியலோடு சொல்லி அசத்தியிருக்கிறார்.
பார்த்த உடனே பிடிக்கவில்லை என்றாலும், பார்க்க பார்க்க பிடித்துப் போவதோடு, பார்வையாளர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடும் அம்சங்கள் நிறைந்த நாயகனாக வலம் வரும் அபிஷன் ஜீவிந்த், பள்ளிப் பருவம் மற்றும் இளமை பருவம் என இரண்டு தோற்றங்களுக்கும் கச்சிதமாக பொறுந்துவதோடு, நடிப்பின் மூலமாகவும் தன்னை ரசிக்க வைத்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அனஸ்வரா ராஜன், எளிமையான அழகோடு, அசத்தலான நடிப்போடும் கவனம் ஈர்க்கிறார். சொல்லாமல் போன காதலை மீண்டும் சொல்ல வேண்டும், என்ற அவரது முயற்சியும், அதற்கான பயணத்தில் ஏற்படும் தன் மன மாற்றங்களையும் அழகியலோடு வெளிப்படுத்தியிருக்கும் அனஸ்வரா ராஜனை படம் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றினாலும், அவரது வசன உச்சரிப்பு மட்டும், நடிகை ஊர்வசியின் சகோதரியும், நடிகையுமான கல்பனாவை நினைவுப்படுத்துகிறது. அவர் டப்பிங் பேசியதற்குப் பதில் வேறு ஒருவரை பேச வைத்திருந்தால், அவரது உடல் மொழி அசைவுகளுக்கு கூடுதல் அழகு சேர்த்திருக்கும்.
அனிஷா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காவ்யா அனில், சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், பார்வையாளர்களின் முதல் காதல் நினைவுகளை கீறி விடும் மாயாஜாலத்தை தன் நடிப்பின் மூலம் நிகழ்த்தியிருக்கிறார்.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் தேனி முருகன், பள்ளி ஆசிரியராக நடித்திருக்கும் சரவணன், நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் ஹரிஷ் குமார், சச்சின் நாச்சியப்பன், சித்தார்த், நாயகியின் பள்ளி தோழிகளாக நடித்திருக்கும் டிம்பிள் கண்ணா, சாச்சனா, அக்காவாக நடித்திருக்கும் ஆர்.ஜே.ஆனந்தி ஆகியோரது கதாபாத்திரங்களின் பயணம் சிறியதாக இருந்தாலும், திரைக்கதையில் ஏற்படும் பாதிப்பு மிகப்பெரியது.
ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, தனது பணி தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதை தவிர்த்துவிட்டு, படம் பார்ப்பவர்களும் தங்களது பள்ளி வாழ்க்கையின் நினைவுகளோடு பயணிக்க வேண்டும், என்பதில் அதிகம் கவனம் செலுத்தியிருப்பது திரையில் தெரிகிறது. நாயகன் - நாயகி இருவர் மட்டுமே பயணிக்கும் ஒரு கதையை, அவர்கள் மூலமாகவே ரசிகர்களிடத்தில் ரசிக்கும்படி கொண்டு சேர்க்கும் வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின், கேமரா கூட சில இடங்களில் காதல் பேசியிருக்கிறது.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகங்களாக இருந்தாலும், அன்புடன் என்ற வார்த்தைக்கு அதிகப்படியான பலம் சேர்க்கும் பாடல்களாக இல்லை என்பதையும் மறுக்க முடியாது. பின்னணி இசை காதல் போல் இனிமை.
படத்தொகுப்பாளர் சுரேஷ் குமார், இரண்டு கதாபாத்திரங்களின் பயணத்தை மிக நேர்த்தியாகவும், சுருக்கமாகவும் அதே சமயம் சுவாரஸ்யமாகவும் நகரும்படி காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் மதன், முதல் காதல் அனுபவங்களை அசைபோடும் நினைவுகளை மையக்கருவாக எடுத்துக்கொண்டு, தமிழ் சினிமாவில் ஏற்கனவே வெளியான படங்களின் பாதிப்பாக கையாண்டிருந்தாலும், தற்போதைய காலக்கட்ட இளைஞர்களுக்கு ஏற்றபடியான காட்சிகளை வடிவமைத்து பார்வையாளர்களை மகிழ்விப்பதில் வெற்றி கண்டிருக்கிறார்.
காலங்கள் கடந்தாலும், முதல் காதல் அனுபவம் மனதில் அழியாத சுவடுகளாக பதிந்து, எப்போது நினைத்தாலும் அதே உணர்வை கடத்தும் என்பதை நாயகன் மற்றும் நாயகி கதாபாத்திரங்கள் மட்டும் இன்றி, மேலும் சில கதாபாத்திரங்கள் மூலம் சொல்லியிருக்கும் இயக்குநர் மதன், அதை வலிமிகுந்த அனுபவங்களாக சொல்லாமல், மகிழ்ச்சியோடு கடந்து செல்லக்கூடிய இனிமையான தருணங்களாக காட்சிப்படுத்தி, பார்வையாளர்களை இரண்டு மணி நேரம் காதல் மற்றும் மகிழ்ச்சியோடு பயணிக்க வைத்திருக்கிறார்.
காதலர்கள் தோற்றாலும், காதல் உணர்வு தோற்பதில்லை, என்பதை கவிதையாக சொல்லி அசத்திய ‘வித் லவ்’ படக்குழுவுக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.




