செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

நகரமே அதிரும் வகையில் தொடர் கொலைகள் நடக்கிறது. கொலையான நபர்கள், கொலை செய்யப்படுவதற்கு முன்பு, உடல் முழுவதும் கடுமையான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக உடற்கூராய்வு தகவல்கள் தெரிவிப்பதோடு, மனநலம் பாதித்த ஒருவரால் மட்டுமே இப்படி செய்ய முடியும், என்று மருத்துவர் தெரிவிக்கிறார். மருத்துவரின் தகவல் மற்றும் ஒரே மாதிரியான கொலை ஆகிய இரண்டு விசயங்களை மட்டுமே வைத்துக் கொண்டு, இத்தகைய கொடூர கொலைகள் செய்யும் கொலையாளியை தேடும் காவல்துறை அதிகாரியான நாயகன் விஜய ராகவேந்திரா, கொலையாளியை எப்படி பிடித்தார்? மற்றும் கொலைகளுக்கான பின்னணி என்ன ? என்பதை பரபரப்பாக சொல்வது தான் ‘செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’.

 

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நாயகன் விஜய ராகவேந்திரா, காவல்துறையினரின் உடல்மொழியை தனது நடிப்பில் கச்சிதமாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். எந்தவித தடயங்கள் இன்றி கொலையாளியை தேடி செல்லும் அவரது புலனாய்வு பயணமும், விசாரணை மேற்கொள்ளும் தோணியும், அவரோடு படம் பார்ப்பவர்களையும் பயணப்பட வைப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்.

 

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, வித்தியாசமான நடவடிக்கைகளை கொண்ட மிரட்டலான கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் வியக்கும்படி கையாண்டு பாராட்டு பெறுகிறார். நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் உஷா பண்டாரி, அதீதமாக நடிக்க கூடிய இடங்களில் கூட அளவாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.

 

ஒளிப்பதிவாளர் ஹேமந்தின் கேமரா, காவல்துறை அதிகாரியின் சிந்தனையோடு படம் பார்ப்பவர்களையும் பயணிக்க வைக்கும் விதத்தில் பயணித்திருக்கிறது. காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒளி மற்றும் வண்ணங்கள் படத்தின் மீதான கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்கிறது.

 

நவநீத் ஷாமி இசை படத்தின் கதாபாத்திரமாக பயணித்திருக்கிறது. அமைதியான சூழல்களில் கூட பார்வையாளர்கள் மனதில் ஒருவித படபடப்பை ஏற்படுத்தும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

 

ஷஷாங் நாராயணாவின் படத்தொகுப்பு கூர்மையாக இருந்தாலும், சில இடங்களில் காட்சிகளை மெதுவாக நகர்த்தியிருக்கிறது.

 

முந்தைய கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் பாகங்களின் தொடர்ச்சியாக இப்படத்தை இயக்கியிருக்கும் தேவிபிரசாத் ஷெட்டி, தொடர்புகளை கச்சிதமாக கையாண்டிருப்பது போல், திரைக்கதையில் புதிய அம்சங்களை புகுத்தி, மேக்கிங்கில் மிரட்டியிருக்கிறார்.

 

தொடர் கொலைகள் மற்றும் அதன் பின்னணியை கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரியின் முயற்சிகள், படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை படு சுவாரஸ்யமாக பயணிக்கிறது. அதேபோல், படத்தின் மேக்கிங் மற்றும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு , அதில் நடித்த நடிகர்களின் நடிப்பு திறன் ஆகியவை படத்தில் இருக்கும் சிறு சிறு குறைகளை மறைத்து, படத்தை ரசிக்க வைத்து விடுகிறது.

 

கொலை சம்பவங்களை மையமாக வைத்துக் கொண்டு ரசிகர்களை சீட் நுணியில் உட்கார்ந்து படபடப்புடன் படத்தை பார்க்க வைக்கும் வித்தையை திறம்பட செய்திருக்கும் ’செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’ படக்குழுவினருக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.