’இதயம் முரளி’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’இதயம் முரளி’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
காதல் தோல்வியின் வலிக்கு மருந்து மற்றொரு காதல் என்ற ரீதியில், ஒரு காதல் போனால் மறுகாதல் என்று பயணிக்கும் நாயகன் அதர்வா, தனது எந்த காதலையும் சொல்லாமலேயே தோல்வியடைகிறார். பள்ளிப் பருவத்தில் ப்ரீத்தி முகுந்தன் உடனான காதலை சொல்லும் முயற்சிக்கும் போது எதிர்பாரத திருப்பத்தால் தன் காதலை மனதுக்குள் வைத்து மறைத்து விடுகிறார். கல்லூரி முடிந்த பிறகு கயடு லோஹர் உடனான இரண்டாவது காதலையும் சொல்ல முடியாமல் மனதுக்குள் மறைப்பவர், இனி காதலே வேண்டாம், நேரடியாக கல்யாணம் தான் என்ற முடிவு எடுக்கும் போது, அங்கேயும் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. அது என்ன ?, அவரது காதல் தோல்விகளுக்கான காரணம் என்ன ? என்பது தான் ‘இதயம் முரளி’ படத்தின் மீதிக்கதை.
பள்ளி பருவம், இளமை பருவம் என்று அனைத்து பருவத்திலும் செம ஸ்டைலிஷாக இருக்கும் அதர்வா முரளியின் உடை, பாணி அனைத்துமே புதிதாக இருக்கிறது. நடிப்பிலும் வேறுபாட்டை வெளிப்படுத்தியிருப்பவர் காதல் காட்சிகளிலும், ரொமான்ஸ் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்.
நாயகிகளாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு லோஹர் இருவரும் அழகு தேவதைகளாக வலம் வருகிறார்கள். அவர்களது ஒவ்வொரு அசைவும், சிரிப்பும் ரசிகர்களின் இதயத்தை வெடிக்க செய்கிறது.
அதர்வாவின் மாமா வேடத்தில் நடித்திருக்கும் நட்டி நட்ராஜ், தமன்.எஸ், நிஹாரிகா, ரக்ஷன், டிராவிட், ஏஞ்சலினா, அஞ்சு குரியன், சுதாகர், யாஷாஸ்ரீ, ஜோனிதா ஆகியோர் காமெடி நடிகர்களாகவும், குணச்சித்திர நடிகர்களாகவும் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா படத்தின் மிகப்பெரிய பலம். திரைக்கதை நிகழ்த்தாத மேஜிக்கை மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் உருவான காட்சிகள் நிகழ்த்தியிருக்கிறது. கதாநாயகன் மற்றும் கதாநாயகிகளை மட்டும் இன்றி, படத்தில் இடம் பெறும் சிறு சிறு நடிகர்களை கூட திரையில் மிளிர செய்திருப்பவர், படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ஓவியம் போல் ரசிக்க வைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் தமன்.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றபடி திரைக்கதை ஓட்டத்திற்கு பலமாக பயணித்திருக்கிறது. பின்னணி இசையும் சிறப்பு. பிரதீப் ஈ.ராகவின் படத்தொகுப்பு காட்சிகளில் இருக்கும் பிரமாண்டத்தை சிதைக்காமல் பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கிறது.
ரமணகிரிவாசனின் வசனம் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன், டிராவிட் செல்வம் ஆகியோரது கூடுதல் வசனங்கள் காதல் காட்சிகளை ரசிக்க வைப்பது போல், காமெடி காட்சிகளில் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது.
காதலை சொல்லாமல் போனதால் தோல்வியடைந்த ஹீரோவின் அனைத்து காதல்களையும் ரசிக்கும்படி திரைக்கதை எழுதியிருக்கும் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன், அதை பிரமாண்டமான காட்சிகள் மூலம் ரசிக்க வைத்திருக்கிறார்.
படத்தின் முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை, எந்தவித தொய்வும் இன்றி, ஜாலியாகவும், காதல் உணர்வோடும் பயணிக்கும் இந்த ‘இதயம் முரளி’ காதலில் தோல்வியடைந்தாலும், ரசிகர்களுக்கு இனிமையான காதல் அனுபவத்தை கொடுக்கிறார்.
இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன், காதல் தோல்வியால் இதய வலியோடு விடைபெறும் முரளியின் மகன் அதர்வாவை வைத்து அதே காதல் தோல்வியை படமாக எடுத்தாலும், அதை ஜாலியாக சொல்லி ரசிகர்களின் இதயத்திற்கு உற்சாகத்தை கொடுத்து, பிரமாண்டமான காட்சிகள் மூலம் ரசிக்க வைத்திருக்கிறார்.
கமர்ஷியல் படத்தை கலர்புல்லாகவும், பிரமாண்டமாகவும் கொடுத்து கண்களுக்கு காட்சி விருந்து படைத்திருக்கும் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.