பழம்பெரும் பின்னணிப் பாடகி ஜமுனா ராணி காலமானார்
தென்னிந்திய திரையிசை உலகின் மூத்த பின்னணிப் பாடகிகளில் ஒருவரான ஜமுனா ராணி (88), வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று காலமானார்.
ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்த ஜமுனா ராணி, ஏழாவது வயதிலேயே திரையிசைப் பயணத்தைத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் சிங்களம் உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி தனித்துவமான இடத்தைப் பெற்றார். 'குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே' உள்ளிட்ட பல காலத்தால் அழியாத பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் நிலையான இடம்பிடித்தார்.
தமிழக அரசின் கலைமாமணி (1998) மற்றும் அறிஞர் அண்ணா விருது (2002) உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற ஜமுனா ராணியின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.