‘வேட்டையன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

‘வேட்டையன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் எஸ்.பி-யான ரஜினிகாந்த், குற்றவாளிகளுக்கு சட்ட ரீதியாக தண்டனை பெற்றுக் கொடுப்பதை விட, என்கவுண்டர் மூலம் தண்டனை கொடுப்பதே சரியானது, என்ற வழியில் பயணிக்கிறார். அதே சமயம், என்கவுண்டர் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலும் அதுவும் ஒரு கொலை தான், அதன் மூலம் தண்டனை கொடுப்பதன் மூலம் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற உண்மை மறுக்கப்படுகிறது, என்ற எண்ணத்தில் பயணிக்கிறார் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி அமிதாப் பச்சன்.
இந்த நிலையில், சென்னையில் அரசு பள்ளி ஆசிரியை கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை, பள்ளி அருகே உள்ள ஒரு குடிசைப் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவரை கைது செய்வதோடு, அவர் தான் கொலையாளி என்பதற்கான ஆதாரங்களை திரட்டுவதோடு அவரை என்கவுண்டர் செய்ய முடிவு செய்கிறது. இதனை அறிந்து அந்த இளைஞர் தப்பிக்க, காவல்துறைக்கு அவமானமாகி விடுகிறது. இதையடுத்து அந்த இளைஞரை கண்டுபிடித்து என்கவுண்டர் செய்வதற்கு கன்னியாகுமரியில் இருந்து ரஜினி வரவைக்கப்படுகிறார். அவரது தலைமையிலான போலீஸ் குழுவினர் அந்த இளைஞரை தேடிப் பிடித்து என்கவுண்டரும் செய்துவிடுகிறது.
இளைஞரின் என்கவுண்டரில் மனித உரிமை மீறப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டும் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அமிதாப் பச்சன் தலைமையில், என்கவுண்டர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அந்த விசாரணையில் என்கவுண்டர் செய்யப்பட்ட இளைஞர் உண்மையான குற்றவாளி அல்ல, என்ற உண்மை தெரிய வருகிறது. அப்படியானால் உண்மையான குற்றவாளி யார்?, அப்பாவியான அந்த இளைஞர் இந்த வழக்கில் எப்படி குற்றவாளி ஆனார்?, ஆசிரியை கொலையின் பின்னணி என்ன? , இதுவரை குற்றவாளிகளை மட்டுமே என்கவுண்டர் செய்து வந்த ரஜினிகாந்த் முதல் முறையாக அப்பாவி ஒருவரை என்கவுண்டர் செய்ததால் எத்தகைய நிலைக்கு ஆளாகிறார்?, போன்ற கேள்விகளுக்கான விடைகள் தான் படத்தின் மீதிக்கதை.
அதியன் என்ற கதாபாத்திரத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரஜினிகாந்த், முதல் பாதியில் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்து வேட்டையனாக அதிரடி காட்டுகிறார். இரண்டாம் பாதியில் போலீஸ் வேட்டையனாக இருப்பதை விட மக்களின் பாதுகாவலனாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து அவர் மேற்கொள்ளும் புலன் விசாரணையும், அதில் அவர் வெளிப்படுத்தும் வேகமும் படத்தின் வேகத்தையும், விறுவிறுப்பையும் பல மடங்கு அதிகரிக்கிறது. வயதுக்கு ஏற்ற கதாபாத்திரமாக இருந்தாலும் தனக்கே உரித்தான ஸ்டைலில் அந்த கதாபாத்திரத்தை கையாண்டதோடு, “குறி வச்சா எற விழனும்” என்ற பஞ்ச் வசனம் மூலம் திரையரங்கையே அதிர வைக்கும் ரஜினிகாந்த், தனது ரசிகர்களுடன் திரை ரசிகர்களையும் திருப்திப்படுத்தியிருக்கிறார்.
மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நடித்திருக்கும் அமிதாப் பச்சன், தனது கதாபாத்திரத்திற்கு மட்டும் இன்றி தான் பேசும் வசனங்களுக்கும் உயிர் கொடுக்கும் விதத்தில் உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார்.
“மூளை இல்லனா போலீஸ் ஆகலாம், திருடனாக முடியாது” என்று போலீஸை கலாய்க்கும் கதாபாத்திரத்தில் நல்ல திருடனாக வலம் வரும் பகத் பாசில், “கல்வி தான் எதிர்காலம் என்று நினைக்கும் இந்தியா போல் உலகில் உள்ள பல நாடுகளில் என் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்துவேன்” என்று கூறிக்கொண்டு அப்பாவி மக்களிடம் கொள்ளையடிக்க நினைக்கும் கல்வி வியாபாரியாக நடித்திருக்கும் ராணா டக்குபதி இருவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
ரஜினிகாந்தின் மனைவியாக நடித்திருக்கும் மஞ்சு வாரியர், போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரித்திகா சிங், அரசு பள்ளி ஆசிரியையாக நடித்திருக்கும் துஷாரா விஜயன் ஆகியோர் கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
கிஷோர், ஜி.எம்.சுந்தர், ராவ் ரமேஷ், ரமேஷ் திலக், அபிராமி, ரோகிணி, ரக்ஷன் என்று படத்தில் பலர் இருந்தாலும் அனைவரும் திரைக்கதையோட்டத்திற்கு ஏற்ப அளவாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
அனிருத் இசையில் “மனசுலாயோ...” பாடல் மனதில் ஒட்டிக்கொள்ள, ”வேட்டையன் தீம்” பாடல் மற்றும் ”ஹண்டர் வந்தார்” பாடல் காட்சிகளுக்கு வீரியம் கொடுக்கும் விதமாக பயணிக்கிறது. பின்னணி இசை அனிருத்தின் வழக்கமான பாணியில் இருந்து வித்தியாசப்பட்டு பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் தனது கேமரா ஜாலங்கள் மூலம் ரஜினிகாந்தை அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் அமர்க்களமாக காண்பித்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் திரைக்கதையை வேகமாக பயணிக்க வைத்தாலும், படத்தில் பேசப்படும் கருப்பொருள் சிதைந்துவிடாமல் கவனமுடன் காட்சிகளை தொகுத்து இயக்குநர் சொல்ல வந்த கருத்தை மக்கள் மனதில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.
இயக்குநர் டி.ஜி.ஞானவேல் இதுவரை சொல்லப்படாத, சொல்ல வேண்டிய சமூக பிரச்சனையை ரஜினிகாந்த் என்ற மாஸ் நடிகருக்கு ஏற்ற வகையில் சொல்லியிருப்பதோடு, ஒரு முழுமையாக கிரைம் திரில்லர் சஸ்பென்ஸ் ஜானர் திரைப்பட அனுவத்தையும் கொடுத்திருக்கிறார்.
படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இருந்தாலும் அவர்களை சரியாக கையாண்டதோடு, அவர்களின் கதாபாத்திரங்களை திரைக்கதையோடு ஒட்டி பயணிக்க வைத்திருக்கும் இயக்குநர் டி.ஜே.ஞானவேல், படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை ரசிகர்களின் கவனம் சிதறாமல் திரைக்கதையை மிக சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்கிறார்.
தனது ஒவ்வொரு படங்களையும் சமூக அக்கறைக் கொண்ட படைப்புகளாக கொடுத்தாலும், அதை 6 முதல் 60 வயதுடையவர்களும் ரசிக்கும்படியான கமர்ஷியல் படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் டி.ஜே.ஞானவேலுக்கு சென்னை பத்திரிகாவின் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.