’ஏன் என்னை ஏதோ செய்தாய்’ பட விமர்சனம்
’ஏன் என்னை ஏதோ செய்தாய்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
தனிமையில் வளரும் நாயகன் டி.ஆண்டனி, இளைஞரானதும் தனிமையில் இருந்து தப்பிப்பதற்காக மதுவுக்கு அடிமையாகிறார். காதல் மற்றும் கல்யாணம் போன்ற பந்தங்களை விரும்பாதவர், தினசரி ஒரு பாலியல் தொழிலாளியை தன் வீட்டுக்கு வரவைத்து அவருடன் மனம் விட்டு பேசுவதை தன் வாடிக்கையாக வைத்திருக்கிறார். அந்த வகையில், ஒரு இரவு அவரது இல்லத்திற்கு வரும் பாலியல் தொழிலாளியான நாயகி மதுமிதா தாஸ், அவரை கவர்ந்து விடுகிறார். அவருடன் பேசுவது, நேரத்தை செலவிடுவது ஆண்டனிக்கு பிடித்துப் போக தினம் தினம் அவரையே அழைக்கிறார். ஆண்டனி தன் மீது காட்டும் அக்கறையால் மதுமிதா தாஸுக்கும் அவர் மீது காதல் மலர்கிறது.
தனிமையில் தவித்த ஆண்டனிக்கு மதுமிதா தாஸின் வருகை புதிய உற்சாகத்தையும், வாழ்க்கையின் மீது புதிய நம்பிக்கையையும் தருகிறது. இருவரும் சேர்ந்து வாழ தொடங்க, ஆண்டனியின் மதுப்பழக்கம் அவரது காதலில் பெரும் சிக்கலை உண்டாக்கி, மதுமிதா தாஸை பிரித்து விடுகிறது. மீண்டும் தனிமைக்கு தள்ளப்படும் ஆண்டனி, தன்னை விட்டு சென்ற மதுமிதா தாஸுடன் சேர்ந்தாரா? இல்லையா ? என்பதை உணர்ச்சிகரமாக சொல்வதே ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் டி.ஆண்டனி மற்றும் நாயகியாக நடித்திருக்கும் மதுமிதா தாஸ், இருவரும் முதல் படத்திலேயே பலமான கதாபாத்திரங்களில் பயணித்திருக்கிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகளை இருவரது உரையாடல்கள் மட்டுமே நகர்த்தி செல்லக்கூடிய வகையில் எழுதப்பட்டிருக்கும் திரைக்கதைக்கு இவர்களது திரை இருப்பு பலம் சேர்த்திருக்கிறது.
நேரடி ஒலிப்பதிவு முறையில் காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதால், தமிழ் பேச தெரியாத மதுமிதா தாஸை பெங்காலி பெண்ணாகவே நடிக்க வைத்திருப்பது இயக்குநரின் சாமர்த்தியம். படம் முழுவதும் ஆங்கிலத்தில் பேசினாலும், ஆங்காங்கே சிறு சிறு தமிழ் வார்த்தையை கஷ்ட்டப்பட்டு பேசும் மதுமிதா தாஸ் தனது கிளி பேச்சால் பார்வையாளர்கள் மனதை மயக்கி விடுகிறார். எந்த நேரமும் சிகரெட்டும், மதுவும் என்று இருக்கும் நாயகன் டி.ஆண்டனி, சிறு சிறு ரியாக்ஷன்களை கூட மிக கவனமாக செய்து நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், நவ்யா சுஜி ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பியேட்ரோ வில்லானி காட்சிகளை எளிமையாக படமாக்கியிருந்தாலும், இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். அதிகமான விளக்குகளை பயன்படுத்தாமல் இயற்கை ஒளியைக் கொண்டு காட்சிகளை படமாக்கியிருப்பது கதைக்களத்தோடு பார்வையாளர்களையும் ஒன்றிவிட செய்கிறது.
ஜெய்கர் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் ஆகியோரது இசையில் பாடல்கள் அனைத்தும் மாண்டேஜ் வகைகளாக இருந்தாலும், திரைக்கதையின் ஓட்டத்திற்கு உயிரூட்டியிருக்கிறது. ஜோயி ரெடாவின் பின்னணி இசை வசனங்கள் மூலம் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை பேசியிருக்கிறது.
பாலியல் தொழிலாளி உடனான காதல் என்ற மாற்றுச் சிந்தனையோடு காதல் கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் டி.ஆண்டனி, அதை எளிமையான முறையில் சொல்லியிருந்தாலும் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார்.
கதை, திரைக்கதை எழுதி இயக்கி படத்தொகுப்பு செய்திருக்கும் டி.ஆண்டனி, ஒரு படத்தொகுப்பாளராக படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். படம் முழுவதும் உரையாடல்களே இடம்பெறுவதால் காட்சிகளின் நீளத்தை குறைத்திருந்தால் படத்தின் சுவாரஸ்யம் அதிகரித்திருக்கும்.
அறிமுக நடிகர்கள், நேரடி ஒலிப்பதிவு என புதிய முயற்சிகளோடு தனது முதல் படத்தை கையாண்டிருக்கும் டி.ஆண்டனி, இயக்குநர் மற்றும் நடிகராக தான் சொல்ல நினைத்த கதையை உணர்வுமிக்க காதல் கதையாகவும், உணர்ச்சிகள் நிறைந்த கதாபாத்திரங்களுடனும் சொன்னதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
முதல் படத்திலேயே பல வித்தியாசமான முயற்சிகளோடு காதல் கதையை உணர்வுப்பூர்வமாக சொன்ன நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் டி.ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினருக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.