ஓ பட்டர்ஃப்ளை’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’ஓ பட்டர்ஃப்ளை’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
இதன் காரணமாக அது நடக்கிறது, இது நடக்க நான் தான் காரணம், அவர் சொல்வது அப்படியே நடக்கும், என்று பல்வேறு தரப்பினர், பல்வேறு தருணங்களில் சொல்வதோடு, நம்புவதும் உண்டு. ஆனால், அப்படி எதுவும் இல்லை, நடப்பவை அனைத்தும் இயற்கையின் மூலம் தற்செயலாக நடப்பதே தவிர, அதற்கு மனிதர்கள் எந்த அடிப்படையிலும் காரணமாக இருக்க முடியாது, என்பதை காட்சிகளின் மூலம் விவரிப்பது தான் கதை.
திருமணமாகி சில மாதங்களில் கணவரை இழந்த நிவேதிதா சதிஷ், மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதோடு, தன்னை சுற்றியிருப்பவர்கள் பாதிப்புக்குள்ளாவதற்கு தான் தான் காரணம் என்று நினைக்கிறார். தான் இறந்தால் அனைத்தும் சரியாகி விடும் என்ற மனநிலைக்கு வருபவர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுகிறார். அப்போது, அவருக்கு ஆலோசனை வழங்கி உண்மையை புரிய வைக்கும் முயற்சியில் துறவறம் பூண்ட அவரது சகோதரி லட்சுமி பிரியா ஈடுபடுகிறார். தன் திருமண வாழ்க்கை மற்றும் முதல் காதல் பற்றிய விபரங்களை பகிர்ந்து கொள்ளும் நிவேதிதா சதிஷ், தன் கணவரை தான் தான் கொலை செய்ததாக கூறி அதிர்ச்சியளிக்கிறார். அவர் அப்படி சொல்வது ஏன்?, அவரது கணவர் இறப்பின் உண்மை பின்னணி என்ன ? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் நிவேதிதா சதிஷ், பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் மிக சாதாரணமாகவே நடித்திருக்கிறார். ஒரு பக்கம் ஏமாற்றிய முன்னாள் காதலன், மறுபக்கம் கணவர் என்று இறுதலைக் கொள்ளி எறும்பு போல் தவிக்கும் சூழலை, தனது நடிப்பின் மூலம் சரியான முறையில் கையாண்டிருப்பது பாராட்டுக்குறியது.
நிவேதிதாவின் முன்னாள் காதலராக நடித்திருக்கும் சிபி சந்திரன், கணவராக நடித்திருக்கும் அதுல் இருவரும் தங்களது வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள். குறிப்பாக அதுல் அதீதமாக நடிக்க கூடிய வாய்ப்புகள் இருந்தும், அளவாக நடித்திருப்பது பார்வையாளர்களுக்கு பெரும் ஆறுதல் அளித்திருக்கிறது.
சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தனது அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் படத்திற்கு பெரும் அடையாளமாக நாசர் பயணப்பட்டிருக்கிறார். துறவறம் பூண்ட சகோதரியாக நடித்திருக்கும் லட்சுமி பிரியா சந்திரமெளலி குழப்பம் நிறைந்த மனங்களை தெளிவுப்படுத்தும் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். கீதா கைலாசம் கதாபாத்திரமும் கவனம் ஈர்க்கிறது.
வைசாக் சோமநாத் இசையில் பாடல்கள் ஓரளவு கேட்கும் ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் வேதராமன் சங்கரன், சிறு சிறு சம்பவங்கள் கூட திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை தன் கேமரா மூலம் புரிய வைத்திருக்கிறார். படத்தொகுப்பாளர் புவனேஷ் மணிவண்ணன், ஆரம்பத்தில் குழப்பத்தோடு பயணிக்கும் திரைக்கதையை இறுதியில் மிக தெளிவாக விவரித்து, பார்வையாளர்களுக்கு புரிய வைத்து விடுகிறார்.
எழுதி இயக்கியிருக்கும் விஜய் ரங்கநாதன், அனைத்து செயல்களும் தற்செயலாக நடக்கிறதே தவிர அதற்கு யாரும், எந்த வகையிலும் காரணமாக இருக்க முடியாது என்பதையும், ஒரு உயிர் போவதற்கு காரணமாக இருக்கும் சம்பவமே, மற்றொரு உயிர் பிழைப்பதற்கும் காரணமாக அமையும், என்ற தத்துவத்தை காட்சிகள் வாயிலாக விவரித்திருக்கிறார்.
மன உளைச்சல், முடிவெடுக்க முடியாத தடுமாற்றம் மற்றும் இருதரப்பு அழுத்தங்களுக்கு இடையில் சிக்கிக்கொண்ட ஒரு பெண்ணின் மனநிலையை காட்சி மொழி மூலம் விவரித்திருப்பது கவனம் ஈர்க்கிறது. அதே சமயம் சாமானியர்களுக்கு புரியும்படி திரைக்கதை பயணப்பட்டிருந்தால் படம் நிச்சயம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருக்கும்.
இருப்பினும், குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு வாழ்வியலின் எதார்தத்தை புரிய வைத்திருக்கும் இயக்குநர் விஜய் ரங்கநாதன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.




