புதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா

புதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் பெண்களின் பங்கு வெகு குறைவாக இருக்கிறது. தமிழ் சினிமா பேச ஆரம்பித்து பல வருடங்கள் ஆகியும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பெண் இயக்குனர்கள் வந்து போயிருக்கின்றனர்.

அப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் புவனா. பத்திரிகையாளராக தனது கேரியரைத் தொடங்கிய இவர், விபி பிலிம் மேக்கர்ஸ் என்ற நிறுவனம் மூலம் திரைப்படம், குறும்படம் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களை தயாரித்தார்.  யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல், 2005 ஆம் ஆண்டு ரைட்டா தப்பா என்ற படத்தை இயக்கி தயாரித்தும் இருந்தார். அந்தப்படம் வணிகத்தை விட விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் தமிழக அரசின் 2 மாநில விருதுகள் இப்படத்திற்கு கிடைத்தது. தன்னை இன்னும் மெருகேற்றுவதற்காக அமெரிக்காவில் பிலிம் மேக்கிங் கோர்ஸ் படித்தார். வெளிநாட்டில் சினிமா சம்பந்தப்பட்ட பல கோர்ஸைகளையும் முடித்துள்ளார். அமெரிக்காவில் இருக்கும்போது அங்கிருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆங்கிலத்தில் ஒரு ஸ்கிரிப்டை உருவாக்கி தயார் நிலையில் வைத்திருக்கிறார்.

இவர் இதற்கு முன் பல குறும்படங்களை தயாரித்து இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய குறும்படங்கள் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் வெற்றி பெற்று இருக்கிறது. தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு "காதலிக்க நேரமுண்டு" என்ற படத்தை இயக்கி தயாரிக்க இருக்கிறார்.

இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு முடிந்தபின் தொடங்க இருக்கிறது.

இவர் புவனா மீடியா என்ற இணையதளத்தையும் யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். மிக முக்கியமாக விஜய்சேதுபதியை ஒரு குறும்படத்தில் அறிமுகப்படுத்தியதும் இவரே.. 2009-இல் வெளியானது இந்தக் குறும்படம். அடிப்படையில் ஒரு பத்திரிக்கையாளராக இருப்பதால் இவரது  மீடியா தளம் கவனிக்கப்படும் ஒன்றாக இருக்கிறது. ஒரு தரமான அறம் சார்ந்த படத்தை அடுத்த வருடம்  தர இருக்கிறார்.