பியார் பிரேமா கல்யாணம்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
பியார் பிரேமா கல்யாணம்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
நாயகன் இளனும், நாயகி சான்வி மேக்னாவும் காதலிக்கிறார்கள். அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்க திருமண ஏற்பாடு நடக்கிறது. திருமணம் முடிந்த சில நிமிடங்களில் சான்வி மேக்னா, மணக்கோலத்திலேயே மண்டபத்தில் இருந்து தலைதெறிக்க தன் வீட்டுக்கு ஓடிவிடுகிறார். என்ன, ஏது என்று புரியாமல் அனைவரும் அதிர்ச்சியடைய, தன் பெற்றோரை பிரிய மனம் இல்லாதது தான் காரணம் என்று தெரிய வருகிறது. கணவர் இளன் மற்றும் பெற்றோர் அறிவுரை சொல்லியும் கேட்காத சான்வி மேக்னா, திருமணத்திற்குப் பிறகு பெண் எதற்காக கணவர் வீட்டுக்கு செல்ல வேண்டும், கணவர் மனைவி வீட்டுக்கு வரலாமே..!, என்று பெண்ணியம் பேசுகிறார்.
ஆரம்பத்தில் சான்வியின் எதிர்பார்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இளன், பிறகு மனைவியின் விருப்பத்தை ஏற்று, அவரது வீட்டில் வாழ செல்கிறார். வேலை இல்லாமல், மனைவி சம்பாத்தியத்தில், மாமியார் வீட்டில் வசிக்கும் இளனின் திருமண வாழ்க்கை ‘பியார் பிரேமா காதல்’ போல் இனித்ததா?, இல்லையா? என்பதை நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘பியார் பிரேமா கல்யாணம்’.
’பியார் பிரேமா காதல்’ மூலம் இயக்குநராக கவனம் ஈர்த்த இளன், ‘பியார் பிரேமா கல்யாணம்’ மூலம் இயக்குநர் மற்றும் ஹீரோவாக கவனம் ஈர்க்க முயற்சித்திருக்கிறார். ஆனால், காதலை கையாண்ட விதம் அவரை காப்பாற்றினாலும், கல்யாணம் அவரை சற்று தடுமாற வைத்திருக்கிறது.
நாயகனாக அறிமுகமாகியிருக்கும் இளன், வயதுக்கு ஏற்ற துள்ளல் நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். பொறுப்பில்லாத பிள்ளை, இனிக்க இனிக்கா காதலிக்கும் காதலர், மாமியார் வீட்டு மருமகன் என பலவிதமான பரிமாணங்களை தனது இயல்பான நடிப்பின் மூலம் இயல்பாக வெளிப்படுத்தி பார்வையாளர்களின் மனம் கவர்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சான்வி மேக்னா, துரு துரு நடிப்பாலும், கவர்ச்சியான உடையாலும் கவனம் ஈர்க்கிறார். நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில், கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கும் சான்வி மேக்னா, முதல் படம் போல் இல்லாமல் பல காட்சிகளை அசால்டாக கையாண்டு கைதட்டல் பெறுகிறார்.
நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா, முதன்மை கதாபாத்திரங்களுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், செந்தில், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல் ஆகியோரது கதாபாத்திரங்கள் அறிவுரை கூறவும், திரைக்கதை ஓட்டத்திற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. யோகி பாபு வரும் காட்சிகள் சில சிரிக்க வைக்கிறது. மாறனின் நகைச்சுவை காட்சிகள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.
ஒளிப்பதிவாளர் தினேஷ் கே.பாபுவின் ஒளிப்பதிவு வண்ணமயமாக இருக்கிறது. நட்சத்திரங்களை அழகாக காட்டியிருப்பவர், மொட்டை மாடியையும், நாயகியின் வீட்டையும் வைத்தே பெரும்பாலான காட்சிகளை படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை அதீத சத்தம் இல்லாமல் அளவாக பயணித்து காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது. காதலோடு பயணிக்கும் முதல் பாதி படத்தை ரசிக்கும்படி தொகுத்த பிரதீப் இ.ராகவ், கல்யாண வாழ்க்கையோடு பயணிக்கும் இரண்டாம் பாதி படத்தை திரைக்கதை தொய்வடையும் விதத்தில் தொகுத்திருக்கிறார்.
காதலை ஜாலியாக மட்டும் இன்றி கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் இளன், கல்யாண வாழ்க்கையில் இருக்கும் கஷ்ட்டங்களையும் ஜாலியாக சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார்.
காதல் மற்றும் கல்யான உறவுகளில் இருக்கும் பிரச்சனைகள் அதை தொடர்ந்து எழும் விமர்சனங்கள் இரண்டையும், தற்போதைய சோசியல் மீடிய உலகையும், அதில் உலா வரும் கருத்துகளையும் வைத்துக்கொண்டு காமெடியாக பேசியியிருக்கிறார்.
‘பியார் பிரேமா காதல்’ படத்தில் காதலர்களை குஷிப்படுத்தி கொண்டாட வைத்த இயக்குநர் இளன் ‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தில் தம்பதிகளை குஷிப்படுத்தி கொண்டாட வைத்திருப்பதோடு, ஹீரோவாக தன்னை நிரூபிக்கவும் செய்திருக்கிறார்.
இயக்குநராக வெற்றி பெற்று தற்போது ஹீரோவாகவும் களம் கண்டிருக்கும் இளனுக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.