‘வெப்பன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
![‘வெப்பன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி](http://entertainment.chennaipatrika.com/uploads/images/image_750x_6665c9ebc40e0.jpg)
‘வெப்பன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
யூடியுப் சேனல் நடத்தும் நாயகன் வசந்த் ரவி, சூப்பர் ஹுயூமன் மனிதர்களை கண்டுபிடித்து அவர்கள் பற்றிய தகவல்களை தனது சேனல் மூலம் உலகிற்கு தெரியப்படுத்துகிறார். அப்படி ஒரு சூப்பர் ஹூயூமன் மனிதரை தேடி வசந்த் ரவி தேனிக்கு செல்கிறார். அதே சமயம், தனது ஆராய்ச்சிக்காக சூப்பர் ஹூயூமன் மனிதரிடம் இருக்கும் சீரத்தின் ஃபார்முலாவை கைப்பற்றும் முயற்சியில் ஆராய்ச்சியாளர் ராஜீவ் மேனன் ஈடுபடுகிறார். இவர்கள் இருவரில் யார் அந்த சூப்பர் ஹூயுமன் மனிதரை கண்டுபிடிக்கிறார்கள், அவர் யார்?, அவருக்குள் இருக்கும் சக்தி எப்படி வந்தது? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
சத்யராஜ் இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார். வசனங்கள் அதிகம் இல்லை என்றாலும், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் கம்பீரமாக நடித்திருக்கிறார். வசந்த் ரவி உணர்ச்சிகரமாக நடித்தாலும் பல இடங்களில் அளவாக நடித்து கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் தன்யா ஹோப், வில்லனாக நடித்திருக்கும் ராஜீவ் மேனன் ஆகியோர் கொடுக்கப்பட்ட வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கன்னிகா, கஜராஜ், வேலு பிரபாகரன் உள்ளிட்ட படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் நடித்திருந்தாலும், அவர்கள் அனைவரும் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ், இயக்குநரின் வித்தியாசமான முயற்சிக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார். ஜிப்ரானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
இயக்குநரை விட படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சுதேஷ், கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது படம் முழுவதும் தெரிகிறது. படத்திற்கு ஆக்ஷன் காட்சிகள் மிக முக்கியம் என்பதை உணர்ந்து பணியாற்றியிருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் சுதேஷ், ஆக்ஷன் காட்சிகளையும் ஒரு கதாபாத்திரமாக படம் முழுவதும் பயணிக்க வைத்திருப்பதும், அவற்றை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருப்பதும் பாராட்டும்படி உள்ளது.
எழுதி இயக்கியிருக்கும் குகன் சென்னியப்பன், தமிழ் சினிமாவில் புதிய சூப்பர் ஹூயுமன் உலகத்தை உருவாக்க முயற்சித்திருக்கிறார். அவரது முயற்சிக்கு சென்னை பத்திரிகாவின் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.